புதுதில்லி, ஜூன் 10 - இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை குறைந்தபாடில்லை. தலைநகர் புதுதில்லியில் திங்களன்று 118.4 டிகிரி பாரன்ஹிட் (48 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தில்லி வரலாற்றிலேயே இதுதான் உச்சபட்ச வெப்பம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.